January 12, 2019
தண்டோரா குழு
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. டெஸ்ட் தொடரில் 2-1 என்ற வென்று வரலாற்று சாதனை படைத்தது. இதையடுத்து,இரு அணிகளுகிடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித்தொடர் இன்று தொடங்கியது. முதல் ஒருநாள் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 7.50க்கு தொடங்கியது.
இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச், கேரே களமிறங்கினர். ஆரோன் பிஞ்ச் 6 ரன்கள் எடுத்த நிலையில், புவனேஸ்வர் குமார் பந்தில் போல்டாகி வெளியேறினார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் நூறாவது விக்கெட்டை புவனேஸ்வர் குமார் கைப்பற்றினார். இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் ஹண்ட்ஸ்கோப் அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில் சமி, புவனேஸ்வர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
289 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி துவக்கத்திலேயே தடுமாறியது. தவான், ராயுடு, கோலி சொற்ப ரன்களில் வெளியேறினர். பின்னர் ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா, தோனி நிதானமாக ஆடி ரன்களை சேர்ந்தனர். 51 ரன்கள் எடுத்த நிலையில் தோனி அவுட் ஆனார். மறுமுனையில் நிலைத்து நின்று அதிரடி காட்டிய ஹிட்மேன் ரோகித் ஷர்மா 129 பந்துகளில் 6 சிக்ஸர், 10 பவுண்டரியுடன் 133 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் குவித்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
ஆஸ்திரேலிய பவுலிங் தரப்பில் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகளையும், பேரண்டார்ஃப் மற்றும் ஸ்டோய்னிஸ் தலா 2 விக்கெட்டுகளையும், சிடில் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ஆஸ்திரேலிய பவுலர் ரிச்சர்ட்சனுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற வெற்றிக்கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது போட்டி வரும் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது.