August 12, 2017
tamilsamayam.com
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், இந்திய துவக்க வீரர் கே.எல். ராகுல் தொடர்ந்து 7 வது அரைசதம் அடித்து உலக சாதனை படைத்தார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியது. இரு அணிகள் மோதும், மூன்றாவது டெஸ்ட் போட்டி, கண்டியில் இன்று துவங்கியது.
இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில், பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணிக்கு, ராகுல், தவான் ஜோடி துவக்கம் அளித்தது.
இதில் ராகுல் 28 ரன்கள் எடுத்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை இலங்கை அணியின் குமாரா தவறவிட்டார். இதை சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட ராகுல், டெஸ்ட் அரங்கில் தனது 9வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். தவிர டெஸ்ட் அரங்கில் தொடர்ச்சியாக இவர் பதிவு செய்யும் 7வது அரைசதம் இதுவாகும்.
இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் தொடர்ச்சியாக அதிக அரைசதத்தை பதிவு செய்த வீரர்களின் உலகசாதனையை ராகுல் சமன் செய்தார். முன்னதாக, இம்மைல்கல்லை எவர்டான் வீக்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) , ஆண்டி பிளவர் (ஜிம்பாப்வே), சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்), சங்ககரா (இலங்கை), கிறிஸ் ரோஜர்ஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் எட்டியுள்ளனர்.தவிர, இம்மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார் ராகுல்.