December 31, 2018
தண்டோரா குழு
என் வாழ்க்கைக்கு ஒளியேற்றிய என் தந்தை இனி இல்லை என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் லெக் ஸ்பின்னர் ரஷித் கான். அந்த அணி கிரிக்கெட் அவ்வளவு பிரபலமில்லாத அணியாக இருந்தாலும் ரசீத் கானின் சுழற்பந்து வீச்சுக்கு சர்வதேச அளவில் அஞ்சாத வீரர்களே இல்லை என்றே சொல்லலாம். கடந்த ஐபிஎல் போட்டியிலும் இவர் ஜொலித்தார்.
தற்போது ரசீத் கான் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும், ஐபிஎல், பிக் பாஷ், பாகிஸ்தான் லீக், வங்கதேச லீக் அனைத்திலும் தனது பந்துவீச்சில் முத்திரை பதித்துள்ளார். இதுமட்டுமின்றி மிகக்குறைந்த வயதில் விரைவாக ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையையும் இவர் பெற்றுள்ளார். மேலும் இந்த ஆண்டில் டி20 போட்டிகளில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியதும் இவர்தான். தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக்பாஷ் லீக் போட்டியில் ரசீத் கான் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், ரசீத் கானின் தந்தை நேற்று திடீரென காலமானதையடுத்து மிகுந்த வேதனையுடன் அந்த செய்தியை அவர் டிவிட்ரில் பகிர்ந்து, தாய்நாட்டுக்கு சென்றுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“ இன்று, நான் என் வாழ்க்கையில் முக்கியமான ஒரு மனிதரை இழந்து விட்டேன். என் வாழ்க்கைக்கு ஒளியேற்றிய என் தந்தை இனி இல்லை. நான் மனவலிமையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் (என் தந்தை) எப்போதும் என்னிடம் கேட்பது ஏன் என தெரிந்து விட்டது. இன்று உங்கள் இழப்பை நான் தாங்கிக்கொள்ள எனக்கு மனவலிமை அவசியம் தேவை. நான் உங்களை மிஸ் பண்றேன் “ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.