January 30, 2018
தண்டோரா குழு
ஐசிசி U-19 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை அபாரமாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி.
ஐசிசி U-19 உலக கோப்பை 2வது அரைஇறுதி போட்டியில் இந்தியா அணி , பாகிஸ்தான் அணியோடு மோதியது.கிறைஸ்ட்சர்ச் ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 102 ரன்கள் விளாசினார்.
இதனையடுத்து 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 29.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 69 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் இஷான் போரால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. வருகின்ற பிப்ரவரி 3-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.