April 5, 2017
tamilsamayam.com
இந்த ஆண்டு நடக்கவுள்ள ஐ.பி.எல்., தொடரில் சாதிக்கும் கனவுடன் காம்பிரின் கொல்கத்தா அணியில், தமிழகத்தின் ஒசூரைச்சேர்ந்த சஞ்ஜய் யாதவ் கனவுகளுடன் காத்திருக்கிறார்.
இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான தொடர் நாளை துவங்குகிறது. இதன் முதல் போட்டியில் கடந்த ஆண்டில் இரண்டாவது இடம் பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சாம்பியன் பட்டம் வென்ற ஹைதராபாத் அணியும் மோதவுள்ளன.
இத்தொடருக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் நடந்தது. இதில் ஒசூரைச்சேர்ந்த சஞ்ஜய் யாதவ் கொல்கத்தா அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். இவரது பூர்வீகம் உத்தர பிரதேசமாகும். இவரது தந்தை வேலைக்காக தமிழகத்தின் ஒசூரில் தஞ்சம் புகுந்தார். தினக்கூலியான இவர் தனது மகன் சஞ்ஜயின் பயிற்சிக்கு போதிய பணம் கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டார்.
ஒருவழியாக போராடி தனது திறமை மூலம் தமிழக கிரிக்கெட் லீக்கில் விளையாடிய இவரின் திறமைப்பார்த்து, காம்பிரின் கொல்கத்தா அணி இவரை ரூ.10 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால் அந்த அணியில் வரிசையாக அனுபவ வீரர்கள் உள்ளதால் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் தான். வாய்ப்பு கிடைத்து இவர் அசத்தும் பட்சத்தில் சர்வதேச அளவிற்கு முயற்சிக்கலாம்.