December 24, 2018
தண்டோரா குழு
இந்தியாவிற்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியில் 15-ஆவது வீரராக 7 வயது சிறுவன் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 டி-20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் டி20 தொடர் டிராவில் முடிந்துள்ளது.
அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில், இந்திய அணி வென்றது. பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 1-1 என சமன் செய்தது.
இந்நிலையில், 3 வது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில், ஆஸ்திரேலிய அணியில் ஆர்சி சில்லார் என்ற 7 வயது சிறுவன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சிறுவன்,அடிலெய்ட் டெஸ்ட்டிற்கு முன்னதாக இந்தியாவுடன் நடந்த பயிற்சி ஆட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.இதயத்தில் உள்ள பாதிப்பால் இதுவரை 13 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஆர்சி சில்லாருக்கு ஆயுட்காலம் எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என்ற நிலை உள்ளது. இச்சிறுவனின்கிரிக்கெட் மீது அவருக்கு உள்ள தீரா காதலை புரிந்துகொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வுக்குழு, மெல்ஃபோர்ன் டெஸ்ட்டில் அவரை இணை கேப்டனாகவும் நியமித்துள்ளது.
லெக் – ஸ்பின்னரான ஆர்சியை அணியில் சேர்க்கப்பட்டுள்ள விஷயத்தை அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், அவரிடம் போன் மூலம் உறுதி செய்தார்.
அப்போது நீ அணியில் சேர்க்கப்பட்டால் என்ன செய்வாய் என கேட்ட கேள்விக்கு, விராட் கோலியின் விக்கெட்டை எடுப்பதே தனது குறிக்கோள் என அவர் தெரிவித்தார்.