May 25, 2017
tamilsamayam.com
வருமான வரி மோசடி வழக்கில் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, உலகில் அதிகம் சம்பாதிக்கும் கால்பந்து வீரர்களில் முக்கிய இடம் வகிக்கிறார். குறிப்பாக அவர் விளையாடும் கால்பந்து அணியான பார்சிலோனா கிளப், அவருக்கு ஆண்டு சம்பளமாக பல கோடிகளை கொட்டிக் கொடுக்கிறது.
பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருவதால் ஸ்பெயின் நாட்டின் குடியுரிமை பெற்றுள்ள மெஸ்ஸி, தற்போது அதே நாட்டில்தான் வசித்து வருகிறார். இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் உருகுவே ஆகிய நாடுகளில் பொய்யான நிறுவனங்களை துவங்கி, அதன் மூலம் 30 கோடி ரூபாய் வரை மெஸ்ஸி மற்றும் அவரது தந்தை வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.
பார்சிலோனா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் மெஸ்ஸி மற்றும் அவரது தந்தைக்கு 21 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்பெயின் உச்சநீதிமன்றத்தில் மெஸ்ஸி மேல் முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த ஸ்பெயின் உச்சநீதிமன்றம், கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது. இதனால் மெஸ்ஸி 21 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.