February 6, 2019
தண்டோரா குழு
வெலிங்டனில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 80 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது.
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில், ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 4 -1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 3 போட்டிகளைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய துவக்க வீரர் டிம் செய்பெர்ட் 43 பந்துகளில் 84 ரன்களை குவித்தார். இந்திய அணி சார்பில் ஹர்டிக் பாண்டியா 2 விக்கெட்களையும், புவனேஸ்வர் குமார் , கலீல் அஹமது ,க்ருனால் பாண்டியா , சாஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினார். 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியில், இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் நியுசிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிக பட்சமாக தோனி 31 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து 1-0 என முன்னிலை வகிக்கிறது. இதுவரை, 9 டி20 ஆட்டங்களை நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா விளையாடியுள்ளது. இதில் 7 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.