November 7, 2018
தண்டோரா குழு
மற்ற நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் பேட்ஸ்மேன்களை விரும்பினால், இந்தியாவை விட்டு சென்று விடு என ரசிகர் ஒருவரிடம் இந்திய அணி கேப்டன் விராட் கோலி
தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கிரிக்கெட் விளையாட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களில் மிகவும் முக்கியமானவராக திகழ்கிறார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. தொடர்ந்து பல்வேறு சாதனைகளையும் படைத்து வருகிறார். இந்நிலையில், ரசிகர் ஒருவரின் கேள்விக்கு விராட் கோலி அளித்த பதில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. விராட் கோலி கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வீடியோவில் ரசிகரின் கேள்வியை படித்து காட்டுகிறார் விராட் கோலி, அதில், விராட் கோலி மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையும், நல்ல எண்ணமும் ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து அவரிடம் ஏதும் சிறப்பான பேட்டிங் திறமை இருப்பதாகத் தெரியவில்லை. நான் இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசிப்பதைக் காட்டிலும், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பேட்ச செய்வதை ரசித்துப் பார்ப்பேன் என்று அந்த ரசிகர் தெரிவித்திருந்தார்.
பின்னர் அந்த கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி,
நீ இந்தியாவில் வாழக்கூடாது என நினைக்கிறேன் இந்தியாவை விட்டு வெளியேறி வேறு எங்காவது சென்று வசிக்கலாம், வாழலாம். ஏதற்காக மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு, நேசித்துக்கொண்டு இந்தியாவில் அந்த ரசிகர் வாழ வேண்டும். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை என்பதற்காகக் கவலைப்படவில்லை, அதனால் இப்படிப் பேசவில்லை. மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு, இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. உங்களுடைய முன்னுரிமை எதுவென்று முடிவு செய்யுங்கள்” என்று காட்டமாக கோலி பதில் அளித்திருந்தார்.
இதையடுத்து, விராட் கோலி பேசிய இந்த வீடியோ பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரது இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கடுமையாக விராட் கோலியை விமர்சித்து, வறுத்து எடுத்துள்ளனர். மேலும், விராட் கோலியின் பேச்சைக் கண்டித்து தொடர்ந்து அவருக்கு எதிராக நெட்டிசன்கள் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.