December 17, 2018
தண்டோரா குழு
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதைத்தொடர்ந்து தற்போது டெஸ்ட தொடர் நடைப்பெற்று வருகின்றது. முதல் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதையடுத்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 326 ரன்னுக்கு ஆட்டமிழந்துள்ளது. இந்திய அணியின் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆஸி. அணியில் அதிகபட்சமாக ஹாரிஸ் 70, டிராவிஸ் ஹெட் 58 ரன்கள் எடுத்துள்ளனர். பின்னர் முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணி 283 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 123(257) ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணியின் ரன்களை விட 43 ரன்கள் குறைவாக இந்திய அணி எடுத்தது.
43 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி 243 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியாவை விட 286 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் சமி அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து 287 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் தொடக்க வீரரான லோகேஷ் ராகுல் 0(4) ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 4(11) ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். பின்னர் வந்த கோலி 17 ரன்னிலும், முரளி விஜய் 20 ரன்னிலும், ரஹானே 30 ரன்னிலும் அவுட் ஆகினர்.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. விஹாரி 24 ரன்களுடனும், பந்த் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி வெற்றி பெற 175 ரன்கள் தேவைப்படுகிறது.