July 24, 2017
tamilsamayam.com
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணித் தலைவர் மித்தாலி ராஜூக்கு இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வாளர் சாமுண்டேஸ்வரநாத் பிஎம்டபிள்யூ கார் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை நேற்று சாமுண்டேஸ்வரநாத் அறிவித்தார். பல விளையாட்டு பிரபலங்களுக்கும் இதுபோன்று கார்களை சாமுண்டேஸ்வரநாத் வழங்கியுள்ளார்.நேற்று ஐசிசி உலகக் கோப்பை 2017 கிரிக்கெட்டில் இங்கிலாந்துடன் போராடி இந்தியா தோற்ற பின்னரும் கார் பரிசாக வழங்குவதாக சாமுண்டேஸ்வரநாத் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சாமுண்டி கூறுகையில்,
“பெண்கள் கிரிக்கெட் அணிக்கு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு தேவைப்படுகிறது. கடந்த 2007ல் செவ்ரோலெட் கார் பரிசு வழங்கி இருந்தேன். ஆனால், தற்போது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை இவ்வளவு காலம் வெற்றிகரமாக நடத்தி சென்ற மித்தாலி ராஜூக்கு வழங்க முன் வந்துள்ளேன். இந்த முறை அவருக்கு செடான் கார் வழங்க உள்ளேன். இங்கிலாந்தில் நமது பெண்கள் அணியினர் விளையாடிய விதம் பலரையும் பெண்கள் கிரிக்கெட் பக்கம் ஈர்த்துள்ளது”என்றார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டி வெற்றியாளர்களான சாக்ஷி மாலிக், பி.வி.சிந்து ஆகியோருக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசாக வழங்கினார். இந்தக் கார்களை ஐதராபாத்தில் நடந்த சிறிய விழாவில் சச்சின் டெண்டுல்கர் வழங்கி இருந்தார்.