May 2, 2018
tamilsamayam.com
மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.
இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது.இந்த ஆண்டுகான தொடர் முக்கிய நகரங்களில் தற்போது நடந்து வருகிறது.
இந்நிலையில்,இன்றைய 31வது லீக் போட்டியில்,ரோகித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.இதில்,டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு துவக்க வீரர் டிகாக் (7) ஏமாற்றினார்.மற்றொரு துவக்க வீரர் வோஹ்ரா (45) ஓரளவு கைகொடுத்தார்.பின் வந்த மெக்கலம்,கோலி ஜோடி அதிரடியாக ரன்கள் சேர்த்தது.
மும்பை பந்துவீச்சை ஓரளவு சமாளித்து விளையாடிய இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த போது மெக்கலம் (37),ஹர்திக் பாண்டியாவின் மிரட்டலான் ரன் – அவுட்டால் வெளியேறினார்.
தொடர்ந்து போராடிய கோலியும் (32) ஒருகட்டத்தில் பெவிலியன் திரும்ப,பெங்களூரு அணியின் ரன் வேகம் பொங்கி எழுந்து அடங்கிய புஷ்வானமாக மாறியது.கடைசி நேரத்தில் கிராண்ட்ஹோமே ஓரளவு கைகொடுக்க,பெங்களூரு அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது.
இதைத்தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தல் வெற்றி என்று களமிறங்கிய அணிக்கு தொடக்கமே ஏமாற்றமாக அமைந்தது.தொடக்க ஆட்டக்காரர்கள் சூர்யகுமார் யாதவ் 9 ரன்களிலும்,கிஷான் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.இதைத்தொடர்ந்து சீரான இடைவெளிகளில் விக்கெட்கள் விழுந்ததால்,மும்பை அணி ரன் எடுக்கத் தடுமாறியது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா மட்டும் நிலைத்து நின்று ஆடி, 42 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அவுட்டானார்.இறுதியாக, மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து,153 ரன்கள் எடுத்து, 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்த வெற்றியின் மூலம்,புள்ளிகள் பட்டியலில் பெங்களூர் அணி 5 வது இடத்திலும்,தோல்வியடைந்த மும்பை அணி 7வது இடத்திலும் உள்ளன.போட்டி முடிந்து,விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது, பெங்களூர் அணியின் கேப்டன் விராத் கோலி,இன்று பிறந்தநாள் கொண்டாடும் தனது மனைவிக்கு இந்த வெற்றியை பரிசளிப்பதாக தெரிவித்தார்.