January 24, 2019
தண்டோரா குழு
பெண்கள் பற்றி அவதூறாக பேசியதாக புகார் கூறப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் மீதான இடைக்காலத் தடை திரும்பப்பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்தியில் புகழ்பெற்ற தனியார் தொலைகாட்யின் காபி வித் கரண் நிகழ்ச்சியில் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இயக்குநர் கரண் ஜோஹர் பல கேள்விகளை கேட்டார். அதற்கு வெளிப்படையான பதில்களை இருவரும் கொடுத்தனர். அப்போது பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதையும், அதனைப் பற்றி தனது வீட்டில் வெளிப்படையாக பேசுவதையும் பற்றி ஹர்திக் பாண்டியா கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இது குறித்து பிசிசிஐயிடம் இருந்து பாண்டியா மற்றும் ராகுலுக்கு எச்சரிக்கை அனுப்பபட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட்டார். மேலும் அந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் பேசியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பாண்ட்யா சார்பில் பதில் அளிக்கப்பட்டது. பாண்ட்யா மற்றும் கே. எல்.ராகுலை 2 தொடர்களில் விளையாடுவதற்கு தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் இருவரும் இந்தியா திரும்பினர். மேலும் பாண்டியாவுடன் விளம்பர ஒப்பந்தம் செய்திக்கொண்ட நிறுவனங்களும் அதனை ரத்து செய்தனர்.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையும் பிசிசிஐ ரத்து செய்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருவரும் பெண்கள் பற்றி அவதூறாக பேசியதாக புகார் கூறப்படுகிறது. புகாரை அடுத்து இருவரையும் பிசிசிஐ சஸ்பெண்ட் செய்தது. மேலும் ஹர்திக் பாண்டியா, ராகுல் மீதான விசாரணை நிலுவையில் இருப்பதாகவும் பிசிசிஐயின் தகவல் வெளியாகியுள்ளன.