January 17, 2018
தண்டோரா குழு
இந்தியா-தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தியா-தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்சில் 335 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 307 ரன்னுக்கு (92.1 ஓவர்) ஆட்டமிழந்தது. கேப்டன் விராத் கோஹ்லி அபாரமாக விளையாடி 153 ரன் விளாசினார். விஜய் 46, அஷ்வின் 38 ரன் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, 28 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன் எடுத்திருந்தது. டி வில்லியர்ஸ் 50 ரன், எல்கர் 36 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். இதைடுத்து அடுத்தது விக்கெட்டுகள் சரிய தென் ஆப்ரிக்கா அணி 2வது இன்னிங்சில் 258 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (91.3 ஓவர்). இந்திய பந்துவீச்சில் முகமது ஷமி 4, பூம்ரா 3, இஷாந்த் 2, அஷ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 287 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. முரளி விஜய், லோகேஷ் ராகுல் இருவரும் துரத்தலை தொடங்கினர். விஜய் 9 ரன் எடுத்து ரபாடா வேகத்தில் கிளீன் போல்டாக, இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. இதில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே ராகுல் 4 ரன், கேப்டன் விராத் கோஹ்லி 5 ரன் எடுத்து லுங்கி என்ஜிடி பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்தியா 4ம் நாள் முடிவில் 35 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்துள்ளது.
இந்நிலையில் 5ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி தென் ஆப்ரிக்கா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 151 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தென் ஆப்ரிக்க அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் 2 போட்டியிலும் தோல்வியடைந்து டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது.