September 26, 2018
தண்டோரா குழு
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடிய போட்டி டிராவில் முடிவடைந்தது.
இந்திய அணி சுப்பர் 4 போட்டியில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில்(பாகிஸ்தான் மற்றும் வங்களாதேஷ்)எதிராக வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.இந்நிலையில் நேற்று மூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடியது.ஏற்கனவே இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு நுழைந்துள்ளதால் இப்போட்டியில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.இதனால் நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி விளையாடியது.இதன்மூலம் தோனி,200 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக பணியாற்றிய 3வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்தப் போட்டியில்,டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முகமது சேஷாத்,அதிரடியாக விளையாடி 116 பந்துகளில் 7 சிக்ஸர்கள்,11 பவுண்டரிகளுடன் 124 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.அவருக்குப் பின் முகமது நபி 56 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார்.அவர்களைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால்,ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 252 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுலும்,அம்பதி ராயுடுவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.அம்பதி ராயுடு 57 ரன்களுக்கும்,ராகுல் 60 ரன்களுக்கும் வெளியேற அவர்களை அடுத்து வந்த கேப்டன் தோனி 8 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் தினேஷ் கார்த்திக் 44 ரன்களில் இருந்த போது,நடுவரின் தவறான முடிவால் எல்பிடபுள்யு ஆனார்.இதன் பின் வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாததால்,இந்திய அணி விக்கெட்களை இழந்து தடுமாறியது.இறுதியாக,கடைசி ஓவரில் 2 பந்துகளில் 1 ரன் தேவைப்பட்ட நிலையில் கடைசி விக்கெட்டான ஜடேஜாவை ரசித் கான் அவுட்டாக்கி ஆட்டத்தை சமன் செய்தார்.