January 24, 2018
tamilsamayam.com
இந்த ஆண்டு ஐபிஎல்., தொடரில் இதுவரை கோப்பை வெல்லாத அணிகள் தான் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு உள்ளதாக சேவக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்.,) நடக்கிறது. இது வெற்றிகரமாக 11வது ஆண்டில் அடி எடுத்து வைக்கவுள்ளது.
இந்த ஆண்டில் சுமார் 2 ஆண்டு தடைக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பங்கேற்கவுள்ளது. இதில் சென்னை அணி, தங்களின் ஆஸ்தான வீரர்களான தோனி, ரெய்னா, ரவிந்திர ஜடேஜா ஆகியோரை தக்க வைத்தது.
இந்நிலையில் தோனி வழக்கம் போல கேப்டனாக நியமிக்கப்படுவார் என ஏற்கனவே சென்னை அணி தெரிவித்திருந்தது. ரெய்னாவை துணைக்கேப்டனாக நியமித்துள்ளது.
இந்நிலையில் இந்த 11வது ஐபிஎல்., சீசனில் கோப்பை வெல்லப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு தற்போதே எகிற துவங்கியுள்ளது. இதில் பஞ்சாப் அணியின் ஆலோசகரான சேவக், கோப்பை வெல்லும் அணியை கணித்துள்ளார்.
இதுகுறித்து சேவக் கூறுகையில்,” இந்த ஆண்டு ஐபிஎல்., கிரிக்கெட்டில் பஞ்சாப், டெல்லி, பெங்களூரு அணிகளில் ஒரு அணிதான் நிச்சயமாக கோப்பை வெல்லும் என நினைக்கிறேன். எல்லா அணியிலும் புதுப்புது வீரர்கள் இடம் பெறுவார்கள். அதனால் ஒட்டு மொத்த முடிவுகளுமே மாறும்.” என்றார்.