October 11, 2018
தண்டோரா குழு
ஐசிசி நடத்தும் உலக டி20 கோப்பை தொடருக்கான தகுதி சுற்றுப் போட்டிகள் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.நேற்று நடந்த போட்டியில் வல்லரசு சீனாவும்,நேபாளமும் மோதின.
இதில் டாஸ் வென்ற நேபாளம் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.முதலில் பேட் செய்த சீன அணி 13 ஓவர்களில் 26 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.அந்த அணியில் 8 வீரர்கள் டக் அவுட்டாகினர்.தொடக்க ஆட்டக்காரர் யான் மட்டுமே 11 ரன்கள் அடித்திருந்தார் 9 ரன்கள் உதிரிகளாக கிடைத்தன.ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இடம் பெற்ற நேபாள வீரர் லேமிசானே 4 ஓவர்கள் வீசியதில் ஒரு மெய்டன்,4 ரன்கள் கொடுத்து,3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
27 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நேபாள வீரர்கள்,11 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றனர்.சீனா இரண்டு ஓவர்கள் வரை கூட கட்டுக்கோப்பாக பந்து வீச முடியாத மோசமான நிலையில் இருந்தது.
சீனா அணி இதற்கு முன் சிங்கப்பூர் அணியிடம் 26 ரன்கள் சேர்த்து தோல்வியடைந்தது.தாய்லாந்துக்கு எதிராக 35 ரன்கள்,பூட்டானுக்கு எதிராக 45 ரன்கள், மியான்மருக்கு எதிராக 48 ரன்கள் சேர்த்தும் சீனா தோல்வியடைந்தது.2010-ம் ஆண்டு ஆசியக் கோப்பையில் இருந்து தான் சீனா கிரிக்கெட் போட்டிக்குள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.