October 22, 2018
தண்டோரா குழு
இந்தியா வந்துள்ள வெஸ்ட் விண்டீஸ் அணி,5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.முதல் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நடந்தது.’டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.வெஸ்ட் விண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 322 ரன்கள் குவித்தது.இந்தியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து,323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, தவான் களமிறங்கினர்.தவான் 4 ரன்களில் அவுட் ஆனார்.பின்னர் கேப்டன் கோஹ்லியுடன் இணைந்த ரோகித் சர்மா அதிரடியாக விளையாட இருவரும் சதம் விளாசினர்.கேப்டன் விராத் கோஹ்லி 140 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.இறுதியில் 42.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 326 ரன்களை எட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.ரோகித் சர்மா 20ஆவது சதம் அடித்ததுடன்,152 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை 150 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் ரோகித் சர்மா படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இவர் 150 ரன்களைக் கடப்பது இது ஆறாவது தடவையாகும்.இதன் மூலம்,ஒருநாள் போட்டிகளில் அதிக முறை 150 ரன்களைக் கடந்த வீரர் என்ற பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
மேலும்,இதுவரை ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர்,ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகியோர் 5 முறை 150 ரன்களைக் கடந்ததே சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.